வருங்காலம், வாழும்காலம்

வருங்காலம் ஆண்டவர் கையில்; 
வாழும்காலம் நம் கையில்...!

திருமண வாழ்க்கை என்பது இருமனம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, சவாலானது எதுவெனில் அது எப்படியாக செல்லும் என்று யாராலும் யூகிக்கவே முடியாது. அது தெரிந்தாலும் சுவாரஸ்யமாக தான் இருந்திட முடியுமா...?
ஒவ்வொரு புது புது சூழ்நிலை வரும்போது ஒருவருக்கொருவர் அவரவர் குறை நிறை அறிந்து ஒத்தாசை செய்து முன்னேறி செல்வது தான் வாழ்க்கை. அது பரலோகமாவதும், நரகமாவதும்.நம் கைகளில் தான் உள்ளது. இதை விளக்க அனைவருக்கும் தெரிந்த ஒரு உதாரணம் சொல்கிறேன்.

நரகத்தில் ஒரு கற்பனை காட்சி:
கைகளை மடக்கவே இயலாத வியாதி கொண்ட மக்கள் நரகத்தில் இருந்தனர். அவர்களால் தங்கள் உணவை உண்ணவே முடியாத நிலை இருந்தது.. ஒவ்வொருவரும் தத்தம் உணவை கீழே கொட்டியும், சிந்தியும் ஒரு வாய் உணவு கூட சாப்பிட முடியாமல் பட்டினியாலும், களைப்பாலும், சண்டை சச்சரவோடு வாழ முடியாமல் தேவனை சபித்தப்படி அழுகையும்
பற்கடிப்போடு நரகத்தில் கதறிக்கொண்டிருந்தனர்

பரலோகத்தில் ஒரு கற்பனை காட்சி:
நரகத்தில் உள்ளது போலவே தத்தம் கைகளை மடக்கவே இயலாத வியாதி கொண்ட மக்கள் பரலோகத்திலும் இருந்தனராம். அவர்களாலும் தங்கள் உணவை உண்ணவே முடியாத நிலை இருந்தது... ஆனால் அங்கே பட்டினியில்லை, களைப்பில்லை, சண்டை சச்சரவில்லை சபித்தலில்லை அழுகையுமில்லை, பற்கடிப்புமில்லை கதறலுமில்லை... மாறாக ஆனந்த களிப்பும், தேவனை துதித்தலும், புகழ்ச்சியுமாகயிருந்தது. எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது? யாரும் அற்புதம் ஏதும் செய்திடவில்லை.
பரலோகத்தில் மக்கள் தாங்கள் மட்டும் உண்டால் போதும் என எண்ணாமல்... மடக்க இயலாத தங்கள் கைகளை கொண்டு உணவினை மற்றவர்களுக்கு ஊட்டினார்கள். அனைவரும் ஒருவருக்கொருவர் இதையே பிறருக்கு செய்தார்கள். உணவை மற்றவர்களுக்கு ஊட்டினார்கள்... அவர்களுக்கும் அப்படியே செய்யப்பட்டது.

ஆம். வாழ்க்கையிலும் அப்படித்தான்.., குறைகள் இல்லாமல் எவருமில்லை... ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்தால் எந்த வாழ்க்கையும் பரலோகமாகிட முடியும்.

- உதயன் (charismaEministry)

Comments